துறைமுகங்கள், விமான சேவைகள் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஜனாதிபதி மீளாய்வு!
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று (15) பிற்பகல் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. காங்கேசன்துறை மற்றும் முக்கிய துறைமுக அபிவிருத்திகள் இதன்போது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் துறைமுக அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்
இலங்கை துறைமுக அபிவிருத்தித் திட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, வடபகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட பணிகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பயணிகள் கொள்ளளவு மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கான அபிவிருத்தித் திட்டம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
வருகை தரும் மற்றும் புறப்படும் முனையங்களை விரிவுபடுத்தல், புதிய முனையக் கட்டுமானப் பணிகள், முனைய விரிவாக்கப் பணிகளை விரைந்து நிறைவு செய்வதற்கான திட்டங்கள், ஆகியவை குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து சார்ந்த நிறுவனங்களின் நிதி வலிமையைப் பயன்படுத்தி, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை சுயமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன், இத்திட்டங்கள் மக்களின் வரிப்பணத்திற்கு சுமையாக அமையாத வகையில், அரச திறைசேரிக்கு (Treasury) அதிகபட்ச பங்களிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே