2027 வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம்?
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சுடன் தொடர்புடைய 2026ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்றது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு பிரிவுகள் மற்றும் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டது.
நாட்டிற்கு அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறைகளில் ஒன்றான வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme) குறித்து இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் தற்போது காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாகத் தீர்த்து, வரும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இதனை முழுமையாக உள்ளடக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரக சேவைகளை மிகவும் திறம்பட மற்றும் விரைவாக மேற்கொள்வதற்காக, டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து பணிகளை முன்னெடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை, முன்மொழியப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களின் நிதி இருப்புக்கு (District Secretary's Fund Pool) மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், அந்தந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் சிறந்த ஒருங்கிணைப்புடன், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப சுற்றுலா அபிவிருத்திப் பணிகளை மிகுந்த செயல்திறனுடன் முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த அரசாங்கங்கள் சுற்றுலா அமைச்சின் கீழுள்ள அரச சொத்துக்கள் மற்றும் காணிகள் குறித்து முறையான அறிக்கை எதனையும் தயாரித்திருக்கவில்லை என்பது இக்கூட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்து அதிருப்தி வெளியிட்ட ஜனாதிபதி, அமைச்சின் கீழ் உள்ள அனைத்துச் சொத்துக்கள் மற்றும் காணிகள் தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவாகத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையின் அசுர வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, வரும் 2030ஆம் ஆண்டளவில் இத்துறைக்கு சுமார் 08 இலட்சம் மனித வளங்கள் (பணியாளர்கள்) தேவைப்படுவார்கள் என இக்கலந்துரையாடலில் மதிப்பிடப்பட்டது.
தற்போதுள்ள ஹோட்டல் பாடசாலைகளினால் (Hotel Schools) நடத்தப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துதல். இளைஞர், யுவதிகள் மத்தியில் இத்துறை சார்ந்த பயிற்சிகளைப் பிரபலப்படுத்துதல்.
நவீன சர்வதேசத் தரத்திற்கு ஏற்ப பயிற்சி நெறிகளைத் தரம் உயர்த்துதல்.
போன்ற முக்கிய வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுப்பதற்கும் இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே