திருகோணமலை அனுமதிப்பத்திரத்தில் கிளிநொச்சியில் மணல் அகழ்வு! – 5 பேர் கைது
திருகோணமலை மாவட்டத்திற்காக வழங்கப்பட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று (19) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, நான்கு டிப்பர் வாகனங்களும் ஒரு உளவு (எக்ஸ்கவேட்டர்) இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி வேறு பகுதியில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து சாரதிகளும் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்கள் மற்றும் உளவு இயந்திரம் என்பன எதிர்வரும் ஜூலை 22 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே