பொது சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா: முதன்மை சுகாதார சேவைகளுக்கு அதிக முதலீடு – ஜனாதிபதி
பொது சுகாதார சேவையின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (21) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஜனாதிபதி, எதிர்காலத்தில் சுகாதாரத் துறைக்காக மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய முதலீட்டை முதன்மை சுகாதார சேவைகளுக்காக ஒதுக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாக தெரிவித்தார்.
உலகளவில் முன்னுதாரணமாக மதிக்கப்படும் இலங்கையின் பொது சுகாதார சேவையை மேம்படுத்துவதில் சிவில் அமைப்புகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கிய வழிகாட்டல் மற்றும் பங்களிப்புகளுக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார்.
மிகவும் குறைந்த வளங்களுடனும் தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் அர்ப்பணிப்புடனும் இலங்கையின் பொது சுகாதார சேவை கட்டியெழுப்பப்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நூற்றாண்டு கால சேவையைப் பாராட்டி 36 சமூக சுகாதார தொழில்சார் குழுக்களை கௌரவிக்கும் நிகழ்விலும் பங்கேற்றார்.
மேலும், நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது சுகாதார சேவையின் புத்தாக்கக் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.
டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் மற்றும் அதிகரித்து வரும் தொற்றா நோய்களின் சவால்களை எதிர்கொள்ள, சமூக சுகாதார சேவையை மேலும் செயற்திறனும் நவீனமயமுமானதாக மாற்றுவதற்கு தொழில்சார் நிபுணர்கள், பங்குதாரர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே