நிதி மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட விழிப்புணர்வு எச்சரிக்கை!
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து நடத்திய விசேட நிதியறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய நீலாவணை மாநகர கேட்போர் கூடத்தில் இன்று (22) காலை நடைபெற்றது.
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவின் நேரடி அவதானிப்பின் கீழும், பொலிஸ் மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலும் இந்த விழிப்புணர்வுத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல உரையாற்றுகையில், "கிராமப்புற மக்கள் மட்டுமன்றி, அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறையினரும் கூட இப்போலி முதலீட்டு திட்டங்களில் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளனர்.
இழந்த பணத்தை மீட்பது கடினம் என்பதால், ஏமாறாமல் விழிப்புடன் இருப்பதே இதற்கான ஒரே தீர்வு" எனக் குறிப்பிட்டார்.
மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர்களான கே. பிரபாகரன் மற்றும் ரி. சஞ்ஜீவன் ஆகியோர் சட்டவிரோத பிரமிட் திட்டங்கள் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளில் இருந்து தப்பிப்பது குறித்து ஆக்கபூர்வமான விளக்கங்களை வழங்கி உள்ளார்கள்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே