விளையாட்டை கலாச்சாரமாக மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட யோசனைகள் தொடர்பில் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது மக்களின் அன்றாட வாழ்க்கையில் விளையாட்டை ஒரு கலாச்சாரமாக மாற்றுவதற்கு மனப்பாங்கு ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள், இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது போன்ற தற்போதைய சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி, ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமுள்ள எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புவதில் இது சிறந்த பக்கபலமாக அமையும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
விளையாட்டை ஒரு போட்டியாக மட்டும் பார்க்காமல், அன்றாட வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்ட ஒன்றாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தியதுடன், 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்காக திறமையான விளையாட்டு வீர, வீராங்கனைகளை அடையாளம் கண்டு, பயிற்சிகளை வழங்கி, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை வெற்றிக்கு தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் விளையாட்டு தொகுதிகளின் புனரமைப்பு உள்ளிட்ட பிரதான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு கேட்டறிந்ததோடு, இலங்கையின் விளையாட்டு வீர, வீராங்கனைகளின் திறன்களை மேம்படுத்தி, சர்வதேச வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அதிநவீன உயர் செயல்திறன் மையமொன்றை அமைப்பதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே