நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!
பயணக் கொடுப்பனவை அதிகரிக்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (10) மற்றும் நாளை (11) ஆகிய இரு தினங்களிலும் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்குச் சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக அதிகரிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
2024ஆம் ஆண்டு, குறித்த பயணக் கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை அந்தக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (10) மற்றும் நாளை (11) ஆகிய இரு தினங்களிலும் சுகயீன விடுமுறையை அறிவித்து, பணிக்குச் சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே