கிண்ணியாவில் கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம்: சேவைகள் முடங்கி மக்கள் அவதி!
பயணக் கொடுப்பனவு அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) முன்னெடுத்த சுகயீன விடுமுறைப் போராட்டத்தால், கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு சேவைகளைப் பெற வருகை தந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இன்று பொதுமக்கள் தினமாக இருந்ததால், கிராம உத்தியோகத்தர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக 10 முதல் 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
எனினும், கிராம உத்தியோகத்தர்கள் பணிக்கு சமூகமளிக்காததால் அவர்களுடன் தொடர்புடைய சேவைகள் இடம்பெறவில்லை. இதனால், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களுக்கு அதிகளவு பணம் செலவிட்டு வந்த பொதுமக்கள், சேவைகளைப் பெற முடியாமல் ஏமாற்றத்துடனும் அதிருப்தியுடனும் வீடு திரும்பினர்.
கிராம உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த எட்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 2024ஆம் ஆண்டு குறித்த பயணக் கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீற்றர் எரிபொருளின் விலைக்கு நிகரான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்ததாகவும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் கிராம உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பதவி உயர்வு உள்ளிட்ட ஏனைய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும் இந்த இரு நாள் சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றும் (10) நாளையும் (11) கிராம உத்தியோகத்தர்கள் பணிக்கு சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே