செம்மணி மனிதப் புதைகுழி: புதிய குழிகளைத் தோண்டுவது குறித்து இன்று தீர்மானம்!
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் புதிதாக எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்டுவது என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கப்படவுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் செ. லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின்போது புதிதாக 5 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், 6 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே குவியலாக அடையாளம் காணப்பட்டு 42 என இலக்கமிடப்பட்டிருந்த மனித என்புக் குவியலும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி பகுதியில் இதுவரை மொத்தமாக 544 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.
அவற்றில் 530 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பகுதியில் இருந்து ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட பிற சான்றுப் பொருட்களை உத்தியோகபூர்வமாகப் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையும் நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, 1 முதல் 37 வரை இலக்கமிடப்பட்ட பிற சான்றுப் பொருட்கள் முழுமையாகப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே