வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 93 பேருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!
இலங்கையில் இடம்பெற்ற கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 93 பேர், தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்பின் மூலம், கடுமையான குற்றங்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில், இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளின் அடிப்படையில் 38 சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், பொலிஸ் மா அதிபரின் நேரடி தலையீட்டின் மூலம் 35 பிரபல குற்றவாளிகளும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் செய்து வெளிநாடு தப்பினாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது! சர்வதேச ஒத்துழைப்புடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே