பாலைவனமாதல், வரட்சியை எதிர்கொள்ளும் ஐ.நா. மாநாடு மங்கோலியாவில்!
ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான சாசனத்தின் (UNCCD) 17ஆவது பங்குதாரர் மாநாடு (COP17) “Restoring Land. Restoring Hope.” என்ற தொனிப்பொருளில் மங்கோலியாவின் உலான்பாத்தர் நகரில் ஓகஸ்ட் 17 முதல் 28ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
பாலைவனமாதல், நிலச் சீரழிவு மற்றும் வரட்சி போன்ற உலகளாவிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளை உருவாக்குதல், சர்வதேச நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவை இம்மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.
சீரழிந்த நிலங்களை மீளமைத்தல், நிலையான நில முகாமைத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலச் சீரழிவு இல்லாத நிலையை (LDN) அடைவதை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்களுக்கு மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் வரட்சி அபாயத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள், முன்கூட்டிய தயார்நிலை மற்றும் நீண்டகால வரட்சி எதிர்ப்புத் திறனை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்படுகிறது.
காலநிலை மாற்றம், வரட்சி, நீர்ப்பற்றாக்குறை மற்றும் நிலச் சீரழிவு போன்ற சவால்களை இலங்கை எதிர்கொண்டு வரும் நிலையில், UNCCD COP17 மாநாடு இலங்கைக்கு முக்கியமான சர்வதேச தளமாக அமைந்துள்ளது.
இம்மாநாட்டின் மூலம் வரட்சியைத் தாங்கக்கூடிய விவசாய முறைகள், திறமையான நீர் முகாமைத்துவ தொழில்நுட்பங்கள், நில மீளமைப்பு மற்றும் மண் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இலங்கைக்கு கிடைக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே