இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இலங்கை வருகை!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
பாதுகாப்பு அமைச்சராக ராஜ்நாத் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இரண்டு நாள் விஜயத்தின்போது ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்த ஆகியோருடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
மேலும், முப்படைத் தளபதிகளையும் சந்திக்கவுள்ளார். இந்த விஜயத்தின்போது மின் கட்டமைப்பு இணைப்புத் திட்டம், சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டம் மற்றும் திருகோணமலையை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன், இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தின் டெண்டர் செயல்முறையை விரைவுபடுத்துதல் மற்றும் இந்திய நிதியுதவியின் கீழ் 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கூட்டு இராணுவப் பயிற்சிகள், திறன் மேம்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், கடற்படை கப்பல்களின் வருகையை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே