ஐ.ம.சக்தியின் உதவித் திட்டத்தின் கீழ் நீர் சுத்திகரிப்புத் தொகுதி வழங்கல்
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்குச் சேவையாற்றிய ஒரே அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், கலேவெல – தேவாஹவ 11ஆம் பிரிவில் உள்ள சன்செத மக்கள் அமைப்பினருக்கு ரூ.12 இலட்சம் பெறுமதியான நீர் சுத்திகரிப்புத் தொகுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நெல் கிலோவொன்றுக்கு ரூ.150 உத்தரவாத விலையை வழங்கி அதனை சட்டமாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் அதற்கான சட்டத்தை கொண்டுவரவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய ரூ.137 செலவாகும் நிலையில், அரசாங்கத்தின் உத்தரவாத விலை ரூ.120 ஆகவே உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.17 நட்டம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அறுவடை காலத்திலும் நெல் கொள்வனவு முறையாக இடம்பெறவில்லை என்றும், நாட்டில் போதுமான அரிசி உற்பத்தி இருக்கும்போதும் 382,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நெல், சோளம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வுபெறும் நீதிபதிகளின் வயதை அதிகரிப்பதே அரசாங்கத்தின் முக்கிய தீர்வாக இருப்பதாக அவர் மேலும் விமர்சித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே