தேசிய ஒருமைப்பாட்டுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி!
நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற 42ஆவது தேசிய மீலாதுன் நபி அரச விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் மீண்டும் எந்தவொரு வகையிலும் இனவாதத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும், சர்வதேச ரீதியில் கௌரவத்திற்கும் அங்கீகாரத்திற்கும் உரிய நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நபிகள் நாயகம் அவர்களின் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற போதனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டை வளர்ச்சியடைந்த மற்றும் சிறந்த அரசாக கட்டியெழுப்புவதில் மக்கள் சக்தியின் மீது அரசாங்கம் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களில் இருந்து அரசாங்கம் பின்வாங்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பொதுமக்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதுடன், நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனுடையதாக மாற்றுவதே எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டைக் கட்டியெழுப்பும் பணியின் ஒரு பகுதியாக போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றவியல் வலையமைப்புகளை ஒழிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என உறுதியளித்த அவர், இந்த முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.
பல வருடங்களாக முஸ்லிம் பள்ளிவாசல்களில் சமயப் பணிகளில் ஈடுபட்டு, தமது வாழ்வின் பெரும்பகுதியை சமூக சேவைக்காக அர்ப்பணித்த மௌலவிகளின் சேவையை பாராட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர்
தேசிய மீலாதுன் நபி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே