கண்டாவளையில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் அலுவலகம் திறப்பு!
தேசிய மக்கள் சக்தியின் கண்டாவளை பிரதேசத்திற்கான மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கண்டாவளை பிரதேச அமைப்பாளர் கேதீஸ்வரன் சஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் கலந்து கொண்டு அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பாடலை வலுப்படுத்துதல், மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்தல், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த அலுவலகம் செயற்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை, பெண்களுக்கு எதிரான இணையவழி பாதிப்புகள் மற்றும் சிறுவர்களின் கல்வி இடைவிலகல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மக்களுடன் இணைந்து தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளையும் தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் இளையதம்பி கணேசபிள்ளை, கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே