தமிழ் மக்களின் காணி உரிமை, அரசியல் பிரச்சினைகள் குறித்து நெதர்லாந்து தூதுவரிடம் விளக்கம்..
வடக்கு–கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நோக்கிலான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் மாத்திரமன்றி, தற்போதைய அரசாங்கத்தின் கீழும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக நெதர்லாந்து தூதுவரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் HE Wiebe de Boer அவர்களை சந்தித்தபோதே இந்த விடயம் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை உள்ளிட்ட பாரம்பரிய மேய்ச்சல் தரைப் பகுதிகளை அபகரித்து, அங்கு குடியேற்றங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தூதுவரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துதல், அரசியல் உரிமைகள் மற்றும் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட விடயங்களும் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் பெரும்பான்மை இனக் குடியேற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் மாகாண சபைகள் உள்ளிட்ட அரசியல் கட்டமைப்புகளில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் அரசியல் வலிமையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு–கிழக்கு பகுதிகளில் நீண்டகாலமாகத் தீர்வின்றி காணப்படும் காணி உரிமைப் பிரச்சினைகள், இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள், மகாவலி விரிவாக்கத் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள், வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களங்களின் எல்லை நிர்ணயங்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகளால் உருவாகியுள்ள காணி உரிமைச் சிக்கல்கள் குறித்தும் நெதர்லாந்து தூதுவரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அண்மையில் ஆறு தமிழ்க் கட்சிகள் இணைந்து முன்னெடுத்துள்ள அரசியல் ஒத்துழைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும், ஆறு நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பாகவும் சந்திப்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு–கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், காணி உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால், இவ்விடயங்களில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனமும் ஈடுபாடும் அவசியம் என நெதர்லாந்து தூதுவரிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே