மாமுனை–தம்பகாமம் அவசர வெளியேற்றப் பாதையை பார்வையிட்ட ரஜீவன் எம்.பி.!
வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாமுனையிலிருந்து தம்பகாமம் ஊடாக பளைக்கு செல்லும் வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த வீதி சுனாமி உள்ளிட்ட அவசர நிலைமைகளின்போது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு முக்கியமான பாதையாக காணப்படுகின்றது.
எனினும், வீதி மோசமான நிலையில் இருப்பதால் அவசரகாலங்களில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டது.
மாமுனையிலிருந்து பளைக்கு செல்லும் நேரடி பாதை சுமார் 7 கிலோமீற்றர் தூரமாக உள்ள நிலையில், மாற்றுப் பாதையை பயன்படுத்தி மருதங்கேணி மற்றும் புதுக்காடு ஊடாக பளைக்கு செல்லும்போது சுமார் 22 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த வீதியை விரைவாக புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி குறித்த வீதியை நேரில் சென்று பார்வையிட்டார்.
நிலைமைகளை நேரில் பார்வையிட்ட பின்னர், வீதியை மிக விரைவில் சீரமைத்து தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினருடன் வடமராட்சி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சாம் மற்றும் மாமுனை கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று வீதியின் நிலைமையை பார்வையிட்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே