இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இலங்கை வருகை
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை (08) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரது விஜயம் செப்டெம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கொழும்பில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய சமூகத்தினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்றுக்கும் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கவுள்ளார்.
அவரது விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியமான நட்புறவு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே