கோணாவில் மக்களை சந்தித்தார் சிறீதரன்! – முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்
கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த சிறீதரன், இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 இலிருந்து 67 ஆக அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
வழக்கறிஞர்கள் சங்கமும் குறித்த திருத்தத்தை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்த அவர், எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாகவும், அந்தத் திருத்தத்திற்கு எதிராக தாம் வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்திற்கு சாதகமான நீதிபதிகளை நியமித்து, தங்களுக்கு ஏற்ற தீர்ப்புகளைப் பெறுவதற்கான முயற்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அதேவேளை, மக்கள் தேர்தலின்போது வேட்பாளர்களை ஆராய்ந்து தெரிவு செய்ய வேண்டும் என வலியுறுத்திய சிறீதரன், கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தரப்பினருடன் சிலர் இணைந்து செயற்படுவது குறித்து தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.
“எங்கள் வீடுகளில் இன்றும் நெருப்பு எரிகிறது; எங்கள் பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், அதற்கு காரணமானவர்களுடன் இணைந்து சிலர் செயற்படுகின்றனர்” என அவர் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே