பிள்ளையான், கருணா வரிசையில் இணைந்த அர்ச்சுனா - நாமல் நல்வழிப்படுத்தியதாக அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையான் மற்றும் கருணாவை மாற்றி, நல்வழிப்படுத்தியதை போன்று நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நல்வழிப்படுத்தியுள்ளார்.
வடக்கையும், தெற்கையும் ஒன்றிணைக்கும் தேசிய கொள்கைக்கு அமையவே அர்ச்சுனா செயற்படுகிறார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அல்ல எவர் பேசினாலும் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.
எமது கட்சியின் கூட்டத்தில் அர்ச்சுனா அவ்வாறு ஒன்றும் பேசவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருணாவையும், பிள்ளையானையும் மாற்றி, நல்வழிப்படுத்தியதை போன்றே, எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நல்வழிப்படுத்தியுள்ளார்.
அதனால் தான் அர்ச்சுனா வடக்கு மாகாணத்துக்கு சுயாட்சி கோரவில்லை. வடக்கையும், தெற்கையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டே அர்ச்சுனா இராமநாதன் செயற்படுகிறார்.
அதற்கு நாமல் ராஜபக்ஷ முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். வடக்கையும், கிழக்கையும் பிரிக்க வேண்டும். சமஷ்டியாட்சியை கோர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு நாமல் ராஜபக்ஷவுடன், அர்ச்சுனா ஒன்றிணைந்துள்ளமை வருத்தமாகவே இருக்கும் என்றார்.