கரைச்சி பிரதேச சபையின் உள்ளூராட்சி வார நிறைவு நிகழ்வு – சிறீதரன் பங்கேற்பு
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக கரைச்சி பிரதேச செயலாளர் தவச்செல்வம் முகுந்தன் மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், கௌரவ விருந்தினர்களாக எந்திரி கதிரமலைநாதன் கடம்பசீலன் மற்றும் துணுக்காய் வலயக் கல்விப் பணிமனை நிர்வாக உத்தியோகத்தர் செல்வராஜ் செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது உள்ளூராட்சி வாரப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
சிறீதரன் உரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு–கிழக்கில் உள்ளூராட்சி சபைகளின் வரலாற்றுப் பயணம், காணி விடுவிப்பு, குடியேற்றம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துகளை முன்வைத்தார்.
மேலும், கிளிநொச்சியில் தொடர்ச்சியாக இடம்பெறும் கடை உடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பிலும் சமூகப் பாதுகாப்பு குறித்து சுட்டிக்காட்டினார்.
அனோஜன் விவகாரம் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர், அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், மொழிபெயர்ப்பு மற்றும் சமூக ஊடகப் பதிவுகளில் ஏற்படும் சிறிய தவறுகள் தமிழ்–முஸ்லிம் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தாத வகையில் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கரைச்சி பிரதேச சபையினால் கிளிநொச்சியில் முதன்முறையாக நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி முயற்சிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அரசியல் பிரசாரங்கள் மற்றும் வாக்குறுதிகளைத் தாண்டி உண்மைகளையும் நேர்மையையும் புரிந்துகொண்டு மக்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.