பழனியில் சோகத்தை ஏற்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம்

Reha
3 years ago
பழனியில் சோகத்தை ஏற்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வத்தக்கவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு என்ற முருகேசன் (வயது 52). விவசாயியான இவர் பழனி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார்.

இவரது மனைவி வளர்மதி (45). இவர்களது மகள் சிவரஞ்சனி (21). இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். மகன் கார்த்திகேயன் (18) பழனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

முருகேசன் வீட்டு அருகே வைக்கோல் போர் மற்றும் மக்காச்சோள தட்டை போர் உள்ளது. இன்று அதிகாலை இந்த வைக்கோல் போர் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் அருகில் வசித்து வந்தவர்கள் முருகேசனுக்கு போன் செய்தனர்.

ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதுபற்றி அவர்கள் பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வைக்கோல் போருக்குள் முருகேசன், அவரது மனைவி வளர்மதி மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திகேயன் ஆகிய 4 பேரும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தீயணைப்பு துறையினர் ஆயக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு தென்மண்டல ஐ.ஜி. அன்பு, திண்டுக்கல் சரக டிஐ.ஜி. விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், டி.எஸ்.பி. சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 4 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முருகேசன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது தெரியவந்தது. இதனால் யாராவது 4 பேரையும் அடித்து உதைத்து இருக்கலாம் என்றும், பின்னர் அவர்களை வைக்கோல் போருக்குள் தள்ளி தீ வைத்து எரித்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே சமயம் முருகேசனை தவிர மற்ற 3 பேரின் உடல்களும் முழுமையாக எரிந்திருந்தது. முருகேசன் உடல் மட்டும் பாதி எரிந்த நிலையில் இருந்தது. இதனால் அவர் மனைவி, மகன், மகளை வைக்கோல் போரில் தள்ளி கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்கேமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

போலீசாரின் தீவிர விசாரணையில்தான் அவர்கள் எரித்து கொல்லப்பட்டார்களா? அல்லது எப்படி இறந்தார்கள்? என்பது தெரியவரும்.

முருகேசன் நேற்று தனது மனைவி மற்றும் மகள், மகனுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு வழக்கம் போல் உணவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கச் சென்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் இன்று காலை அவர்கள் வைக்கோல்போரில் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

முருகேசனுக்கு கடன் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று தெரிகிறது. தொழில் போட்டி காரணமாக அவர்கள் எரித்து கொல்லப்பட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

சம்பவ இடத்துக்கு மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்களும் வரழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.