சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய நபர் கைது

Prasu
3 years ago
சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய நபர் கைது

இந்தியாவில் உள்ள ஒரு நபர் கனடாவில் உள்ள பெண் போன்று சிறுமிகளிடம் பேசி ஆபாச வீடியோ கேட்டு மிரட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் வசிக்கும் 15 வயதுடைய ஒரு சிறுமியிடம், கனடா நாட்டிலிருந்து ஒரு பெண் பேசியிருக்கிறார். அவர், சிறுமிக்கு தன்மீது நம்பிக்கை வருமாறு பேசியிருக்கிறார். இதனால் சிறுமி அந்தப் பெண்ணை முழுமையாக நம்பியிருக்கிறார். அதன்பின்பே, சிறுமியிடம் ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்புமாறு கேட்டவுடன் சிறுமி அனுப்பிவிட்டார்.

அதன் பின்பு, திடீரென்று ஒருநாள் அந்த பெண் ஆண் குரலில் பேசி, தான் இவ்வளவு நாட்களாக பெண் போன்று பேசி உன்னை ஏமாற்றி வந்தேன் என்று கூறியுள்ளார். மேலும், தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். அவ்வாறு நீ செய்யவில்லையெனில் நீ எனக்கு அனுப்பிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால், சிறுமி டெல்லி காவல்துறையினரிடம் கடந்த மாதம் 27ஆம் தேதி என்று புகார் தெரிவித்துள்ளார். இந்தச் சிறுமி கூறிய தகவல்களின்படி, காவல்துறையினர் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் நோட்டீஸ் அனுப்பி அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.

அதன்பின்பு, அந்த நபரின் பெயர் அப்துல் சமது என்பது தெரியவந்தது. மேலும், லக்னோவைச் சேர்ந்த இவர், ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். காவல்துறையினர், இவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது. அதாவது, அப்துல் சமது யூடியுப் மூலம் பல ஏமாற்று வேலைகள் மற்றும் அதற்கான செயலிகள் பற்றியும் அறிந்துகொண்டு, கனடா நாட்டிலிருந்து பெண் பேசுவது போல் நடித்து இன்ஸ்டாகிராமில் பல சிறுமிகளிடம் பழகி அவர்களிடம் ஆபாச வீடியோக்களை வாங்கி மிரட்டி வந்துள்ளார்.

தற்போது, இவரின் மொபைலிலிருந்து சிறுமிகளின் வீடியோக்கள் உட்பட பல தகவல்களை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். மேலும் இவர் இணையதளங்களில் போலியாக பல கணக்குகள் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.