தங்க செயின் பரிசளித்து வாள்வீச்சு வீராங்கனையை பாராட்டிய சசிகுமார்

#Cinema
Prabha Praneetha
3 years ago
தங்க செயின் பரிசளித்து வாள்வீச்சு வீராங்கனையை பாராட்டிய சசிகுமார்

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியை நடிகர் சசிகுமார் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் இரா.சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு சில புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்தார். இருப்பினும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை அழைத்து பாராட்டினார்.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார், வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியை நேரில் சந்தித்து அவருக்கு தங்க செயின் அணிவித்து பாராட்டி உள்ளார். இந்த தகவலை கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் இரா.சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 

இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது: “வென்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம்; தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். 

எல்லோர் இயல்பும் இதுதான் என்றாலும், நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை சந்தித்து, தங்க செயின் அளித்து வாழ்த்தி இருக்கிறார் நடிகர் சசிகுமார். நல்லமனம் வாழ்க” என்று குறிப்பிட்டுள்ளார்.