மதுரா - பிருந்தாவனம் மாநகராட்சியில் மது, இறைச்சி விற்க தடை

Prabha Praneetha
3 years ago
மதுரா - பிருந்தாவனம் மாநகராட்சியில் மது, இறைச்சி விற்க தடை

உத்தர பிரதேசத்தின் மதுரா - பிருந்தாவனம் மாநகராட்சியில் மது, இறைச்சி விற்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டம், மதுரா பிருந்தாவனம் பகுதி பகவான் கிருஷ்ணரின் ஜன்ம பூமியாகக் கருதப்படுகிறது. தனித்தனி மாநகராட்சிகளாக இருந்த மதுராவும், பிருந்தாவனமும் மக்கள் கோரிக்கையை ஏற்று மதுரா - பிருந்தாவன் என ஒரே மாநகராட்சியாக 2017-ல் இணைக்கப்பட்டது.

சமீபத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்துக்காக மதுராவுக்குச் சென்ற  முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கிருஷ்ண ஜன்ம பூமியான மதுராவில் மது, இறைச்சி விற்க தடை விதிக்கப்படுகிறது என அறிவித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக உ.பி., அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ண ஜன்ம பூமியான மதுரா - பிருந்தாவனத்தின் புனிதத்தைக் கருதி அப்பகுதியைச் சுற்றி 10 கி.மீ., தூரத்துக்கு இறைச்சி, மது விற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை முழுமையாக அமல்படுத்த மதுரா மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியைச் சேர்ந்த மது, இறைச்சி வியாபாரிகளுக்கு வேறு தொழில் ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.