துறைமுகத்தில் தேங்கியிருந்த 400 கொள்கலன்கள் விடுவிப்பு − எஞ்சியவை விரைவில்
கொழும்பு துறைமுகத்தில் டொலர் தட்டுப்பாடு காரணமாக தேங்கியிருந்த 800 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் 400 கொள்கலன்களை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, மத்திய வங்கியினால் டொலர் வழங்கப்பட்ட நிலையிலேயே, இந்த கொள்கலன்களை விடுவிக்க முடிந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எஞ்சிய கொள்கலன்களை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியினால் 50 மில்லியன் அமெரிக்க டொலர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அரச வங்கிகளின் ஊடாக, இறக்குமதியாளர்களுக்கு இந்த பணம் விநியோகிக்கப்படவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில், அதனை வழங்க தயார் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.