கேரள மாநிலத்தில் பாம்பை கடிக்கவிட்டு 25 வயது பெண் கொலை; கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

#Murder #India
Reha
4 years ago
கேரள மாநிலத்தில் பாம்பை கடிக்கவிட்டு  25 வயது பெண் கொலை; கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கேரள மாநிலம் கொல்லம் அருகே, இரண்டாவது திருமணத்துக்குத் தடையாக இருந்த மனைவி உத்ராவை  பாம்பை கடிக்க வைத்துக் கொலை செய்த சூரஜ்ஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கூடுதலாக 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக சாட்சிகள் ஏதுமின்றி, அறிவியல்பூர்வமான தடயங்கள் மற்றும் சூழ்நிலைகளை மட்டுமே ஆராய்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

சூரஜ் தரப்பில் கருணை கோரிய நிலையில், உத்ர பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மரண தண்டனைக் கோரினார். குற்றவாளிக்கு எந்த கருணையும் காட்ட முடியாது என்று கூறிய நீதிபதிகள், இரட்டை ஆயுள் தண்டனை விதித்தனர்.

ஆனால், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய உத்ராவின் பெற்றோர், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்லவிருப்பதாகக் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு மே மாதம் நாகப்பாம்பை வீட்டுக்குள் விட்டு, தனது மனைவி உத்ராவை கொலை செய்த வழக்கில், கணவர் சூரஜ் குற்றவாளி என்று கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இவருக்கான தண்டனை விவரங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் எந்த சந்தேகமும் ஏற்படாத இந்த வழக்கில், உத்ராவின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அளித்த தகவலில்தான் சந்தேகத்தின் ஆரம்பப் புள்ளி இருந்தது.

அதாவது, உத்ரா பாம்பு கடித்து இறப்பதற்கு முன்பு, 2020 மார்ச் 2ஆம் தேதி கட்டுவிரியன் பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுள்ளார். இதனை காவல்துறையினரிடம் உத்ராவின் பெற்றோர் கூறியபோதுதான், விசாரணை நடத்தி வந்த காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சந்தேகத்தின் அடிப்படையில் சூரஜ் கைது செய்யப்பட்டார். விசாரணையில், சூரஜ் உத்ராவை இதற்கும் முன் மேலும் 2 முறை பாம்பை ஏவி கடிக்க வைக்க முயன்றதும், ஆனால், அந்த பாம்புகள் உத்ராவை கடிக்காமல் விட்டுவிட்டதும் தெரிய வந்தது.

ஒரு கொலை வழக்கை எவ்வாறு அறிவியல்பூர்வமாகவும், தொழில்முறையிலும் விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்பதற்கு இந்த வழக்கில் விசாரணை நடத்திய காவல்துறை தனிப்படையினரின் முழு முயற்சியே உதாரணம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், துப்பு துலங்க, தடயவியல், பாம்பின் மரபணு உள்ளிட்ட பல நுணுக்கமான விஷயங்களை தனிப்படையினர் விசாரணைக்கு உள்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4