ஓட்டோ - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்! - இளைஞர் பலி; இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயம்
ஓட்டோ ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் மரணமடைந்ததுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், மீகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
ஓட்டோவில் பயணித்த வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். விபத்தில் ஓட்டோவின் சாரதி, ஓட்டோவில் பயணித்த இரு பெண்கள், இளைஞர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்தனர்.
இவர்களில் ஓட்டோவில் பயணித்த இளைஞரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடுபில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்திசாலைக்கு மாற்றப்படும்போது குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் செலுத்துநரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.