குறும்பு செய்த மாணவனை தலை கீழாக தொங்கவிட்ட ஆசிரியர்

Prasu
2 years ago
குறும்பு செய்த மாணவனை தலை கீழாக தொங்கவிட்ட ஆசிரியர்

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் குறும்பு செய்த மாணவனை தலைமை ஆசிரியர் பள்ளியின் முதல் தளத்தில் இருந்து தலைகீழாக தொங்கவிட்டு அச்சுறுத்தும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு பயிலும் சோனு என்ற மாணவர் , பள்ளியின் மதிய உணவு இடைவேளையின் போது சக மாணவர்களிடம் அதிக குறும்பு செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் அந்த மாணவனை அச்சுறுத்தும் வகையில் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா, முதல் தளத்தில் இருந்து ஒரு காலை மட்டும் பிடித்துக்கொண்டு மாணவனை தலைகீழாக தொங்கவிட்டு அச்சுறுத்தியுள்ளார்.

இதனை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இனி இப்படி குறும்பு செய்யமாட்டேன் என்று சொன்னால் தான் விடுவேன் என்று அந்த தலைமை ஆசிரியர் மிரட்ட, இனி குறும்பு செய்ய மாட்டேன் மன்னித்து விடுங்கள் என மாணவர் கூறியுள்ளார்.

அதன் பிறகு அந்த மாணவனை தலைமை ஆசிரியர் மேலே தூக்கி இருக்கிறார். இப்படி ஒரு கொடூர தண்டனையை எந்தப் பள்ளி தலைமை ஆசிரியரும் செய்யமாட்டார்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி மாணவனை தலைகீழாக தொங்கவிட்டு அச்சுறுத்திய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.