பல பிரதேசங்களில் வெள்ள அபாயம்
மொனராகலை மாவட்டத்தில் உள்ள கும்புக்கன் ஓயா பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீர்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கும்பக்கன ஓயாவைச் சூழவுள்ள நக்கல, கும்புக்கன மற்றும் ஒக்கம்பிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே, கும்புக்கன ஓயாவை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும், வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.
இதேவேளை, கடும் மழை காரணமாக பதுளை பசறை 10ஆம் தூண் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பதுளை, பசறை 10ஆம் தூண் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது. மற்றையவர் உயிர் பிழைத்துள்ளார்.
இதேவேளை, கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
புத்தளம் வனாத்தவில்லுவை ஊடாக செல்லும் மன்னார் வீதியில் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
மேலும், தெந்துரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 02 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதுடன், கடும் மழை காரணமாக மேலும் வான்கதவுகளை திறக்க வேண்டியுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.