பதவியைத் துறக்கப்போகும் முக்கிய முஸ்லீம் அமைச்சர் நடந்தது என்ன?
அமைச்சரவை அமைச்சர்களில் ஒரே ஒரு முஸ்லிம் இனத்தவரும், நீதி அமைச்சருமான அலி சப்ரி பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கருத்திட்டத்தின் கீழ், பரிந்துரைகளை வழங்கும் அரச தலைவர் செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 2019ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் சிவில் சமூகக் குழுவான 'வியத்மக'வுடன் இணைந்து பிரசாரங்களில் ஈடுபட்ட அலி சப்ரி, எதிர்பாராத ஏமாற்றத்தை அடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய மிக்-27 போர் விமானங்களை கையகப்படுத்தியது உட்பட பல முக்கிய வழக்குகளில் கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான அலி சப்ரி தற்போதை அரசாங்கத்தின் நீதியமைச்சராக செயற்படுகின்றார்.
இந்த நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய பின்னர் அலி சப்ரி தன்னுடைய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நீதியமைச்சருடன் கலந்துரையாடியதுடன், அவசர தீர்மானம் தொடர்பில் நீதியமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எவ்வாறெனினும் அரச தலைவர் செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நீதி அமைச்சராக தன்னுடன் ஆலோசிக்கப்படவில்லை எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.