பருவநிலை மாநாட்டில் அசத்தும் தமிழக மாணவி!

Prasu
2 years ago
பருவநிலை மாநாட்டில் அசத்தும் தமிழக மாணவி!

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது மக்கள் கோபமும், விரக்தியும் அடைந்துள்ளதாக பருவநிலை மாநாட்டில் தமிழக மாணவி வினிஷா உமாசங்கர் பேசினார். ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட பல நாட்டு தலைவர்கள் பங்கேற்று பேசினர். இந்நிலையில் ‘காடுகள் மற்றும் நிலம் பயன்பாடு தொடர்பாக இங்கிலாந்தில் தனி அமர்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

2030ம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்பு மற்றும் நிலம் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர்கள் இதில் உறுதி எடுத்துக் கொண்டனர். மேலும், இதற்கான உறுதிசான்றில் சீனா, பிரசில் உள்ளிட்ட பல நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி வினிஷா உமாசங்கர் கலந்து கொண்டார். இவர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சோலாரில் இயங்கும் இஸ்திரி வண்டியை உருவாக்கியவர். இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தொடங்கிய எர்த்ஷாட் விருதுக்கான இறுதி போட்டியில் இவர் தேர்வாகியுள்ளார்.

 தூய்மை தொழில்நுட்பம் குறித்து மாநாட்டில் வினிஷா பேசியதாவது: பேசுவதை குறைத்துக் கொண்டு, செயலில் ஈடுபட வேண்டும். புதைபடிவ எரிபொருள்கள், புகை மற்றும் மாசு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு பதிலாக எர்த்ஷாட் விருது வென்றவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்வுகளை ஆதரிக்க வேண்டும். பழைய விவாதம் குறித்து சிந்திப்பதை நிறுத்திக் கொண்டு எதிர்காலத்துக்கான புதிய பார்வையோடு அணுக வேண்டும். எனவே, எங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க சர்வதேச நிறுவனங்கள், உலக தலைவர்கள், சமூகத்தினர், தொழில் அமைப்பின் தலைவர்கள் ஆகியோர் உங்கள் நேரம், பணம், முயற்சியை எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும்.

எங்களுடன் நீங்கள் சேர்ந்தாலும், நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்களே வழிநடத்துவோம். தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். எதிர்காலத்தை உருவாக்குவோம். எனவே, தயவு செய்து எனது அழைப்பை ஏற்றுகொண்டு வாருங்கள். எனது தலைமுறையினர் பலர் வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும், விரக்தியும் அடைந்துள்ளனர். கோபம் கொள்ள எங்களுக்கு நேரமில்லை. செயல்பாடு முக்கியம். நான் இந்திய பெண் மட்டுமல்ல. பூமியை சேர்ந்த பெண். அப்படி இருப்பதில் பெருமை அடைகிறேன். இவ்வாறு வினிஷா பேசினார்.