25 பேரன், பேத்திகள், 50 கொள்ளுபேரன், பேத்திகள்: 4 தலைமுறை கண்ட 132 வயது பாட்டி மரணம்

#India
Prasu
2 years ago
25 பேரன், பேத்திகள், 50 கொள்ளுபேரன், பேத்திகள்: 4 தலைமுறை கண்ட 132 வயது பாட்டி மரணம்

இன்றைய உலகில் இளம் வயதிலேயே பலரும் நோய்வாய்பட்டு மருந்து, மாத்திரைகளுக்கு அடிமையாகி உள்ளனர். ஆனால் நூற்றாண்டு கடந்து நலமுடன் மூதாட்டி வாழ்ந்து தனது 132-வது வயதில் மரணத்தை சந்தித்துள்ளார்.

இவர் நோய்வாய்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை என்கின்றனர் அவரது வம்சாவழியினர். 132 வயதில் மரணத்தை சந்தித்த மூதாட்டியின் பெயர் சந்தனம்மாள்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார்.

கடந்த 18.5.1889-ம் ஆண்டு பிறந்த சந்தனம்மாளின் கணவர் பெயர் ஆரோக்கியம் என்ற வேளாணி.

இந்த தம்பதிகளுக்கு 10 குழந்தைகள்.அதில் தற்போது பிரான்சிஸ், சேசுராஜ், அருளானந்த் ஆகிய 3 மகன்களும், தேவநேசம், பாத்திமாமேரி, பாக்கியம்மேரி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். 1982-ம் ஆண்டு கணவர் ஆரோக்கியம் என்ற வேளாணி இறந்து விட்ட நிலையில் மகள் பாக்கியம் மேரியுடன் சந்தனம்மாள் வசித்து வந்தார்.

இவருக்கு 25 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்கள் மூலம் 50 கொள்ளுபேரன், பேத்திகளையும் சந்தனம்மாள் பார்த்துள்ளார். மொத்தத்தில் 4 தலைமுறைகளை சந்தித்த சந்தனம்மாளுக்கு கடந்த சில ஆண்டுகளாக வயோதிகம் காரணமாக பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் அவர் எந்த ஆஸ்பத்திரிக்கும் சென்றதில்லை. மீன் குழம்பை விரும்பி சாப்பிடும் சந்தனம்மாளுக்கு கடந்த தீபாவளிக்கு பின்னர் சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் தனது 132-வது வயதில் நேற்று இறந்தார்.

இதனை கேள்விபட்டதும் சுற்றுவட்டார மக்கள் திரண்டு வந்து சந்தனம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினர்.