சமகி ஜன பலவேகய கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார் நடவடிக்கை
சமகி ஜன பலவேகய கட்சியினர் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கோவிட் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, அவரது அனுமதியின்றி பொதுக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொழும்பு நகருக்கு மக்களை வரவழைப்பது தொடர்பாக பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க மேல் மாகாணத்தில் உள்ள ஏழு நீதவான் நீதிமன்றங்களினால் அவ்வாறான ஒன்றுகூடல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி, பொதுமக்கள் ஒன்று கூடுவது, கூட்டுவது, கூட்டத்தில் பங்கேற்பது சட்ட விரோதமானது என்றார்.
அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.