வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் நடைபெற்றுள்ளதா?
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆராய ஆரம்பித்துள்ள நிலையில், ஆளுநர் செயலகத்தில் பணியாற்றும் பல அதிகாரிகள் இடமாற்றத்திற்கு முண்டியடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்களில் இடம்பெற்ற முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பாக ஆளுநருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதனடிப்படையில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதா? என்பதை ஆராய்வதற்கு ஆளுநர் முனைப்பு காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகராஜா, அதிகாரிகளின் முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் முறைப்பாடு இருப்பின் வழங்குமாறு கேட்டிருந்தார்.
இந்நிலையிலேயே ஆளுநர், விசாரணைக்கான முனைப்பை காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆளுநர் அலுவலகம், அமைச்சுக்கள், திணைக்களங்களில் சந்தேகத்திற்கிடமான நிர்வாக மற்றும் நிதி விடையதான கோப்புக்களையும் ஆளுநர் ஆராய ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.