விபத்தில் பலியான 1 ரூபாய் பிச்சைக்காரர்; ஊரே சேர்ந்து இறுதி ஊர்வலம் நடத்திய நெகிழ்ச்சி: என்ன காரணம்?

Prasu
2 years ago
விபத்தில் பலியான 1 ரூபாய் பிச்சைக்காரர்; ஊரே சேர்ந்து இறுதி ஊர்வலம் நடத்திய நெகிழ்ச்சி: என்ன காரணம்?

சாலை விபத்தில் மரணமடைந்த ஒரு ரூபாய் பிச்சைக்காரருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின் பல்லாரி மாவட்டம் , ஹடகலி நகரில் பல ஆண்டுகளாக பசவா ( 45 ) என்பவர் இருந்தார். மனதளவில் பாதிக்கப்பட்டவராக இருந்தார். பொதுமக்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே பிச்சையாக கேட்டு பெறுவார். அதற்கு மேல் யார் கொடுத்தாலும் வாங்க மாட்டார் . மனம் பாதிக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்காமல் இருந்து வந்தார்.

பசிக்கும் போது , யார் வீட்டு வாசலில் நின்றாலும் அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விபத்தில் காயமடைந்த பசவாவை ஷடகலி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரின் மரண செய்தி அறிந்ததும் ஹடகலி நகரில் வசிக்கும் மக்கள் அவரின் புகைப்படம் உள்ள பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர் . கிராமத்தில் பொது இடத்தில் மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. காலை அவரது இறுதி ஊர்வலம் நடந்தது.

மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உடலை ஏற்றி வாத்திய இசை முழக்கத்துடன் ஆடல் , பாடலுடன் ஊர்வலமாக எடுத்து சென்றனர் . இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பெரிய அரசியல்வாதிகள் , பணக்காரர்கள் , செல்வாக்கு மிக்கவர்களின் இறுதி ஊர்வலத்தில் கூட இவ்வளவு பேர் சென்றதில்லை . பசவாவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.