சிறிலங்காவுக்கு எதிராக கனடாவில் வலுக்கும் பிரசாரம்
சிறிலங்காவில் இறுதிக்கட்டப்போரில் இடம்பெற்ற குற்றங்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கனேடிய சட்ட ஆலோசகரும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணியுமான டேவிட் மட்டாஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் வியாபித்து வாழும் பெரும் எண்ணிக்கையான ஈழத் தமிழ் அகதிகள் தோற்றம் பெறுவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான மீறல்களால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வதற்கான பிரசாரத்தை கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழர் உரிமைக்கான குழுமம் ஆரம்பித்துள்ளது.
இதன் ஓரங்கமாக இது குறித்து தெளிவுபடுத்தும் வகையில் கனடாவின் டொரொன்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி தொழில்நுட்பம் ஊடான ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிட்ட டேவிட் மட்டாஸ் இறுதிக்கட்டப்போரில் இடம்பெற்ற குற்றங்கள் சர்வதேச ரீதியில் மிகுந்த அவதானத்திற்குரியவை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.