எரிவாயு விபத்துகளுக்கு இழப்பீடு கோர ஒரு வாய்ப்பு?
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிகழும் எரிவாயு விபத்துக்களுக்கு எரிவாயு நிறுவனங்களின் தவறே காரணம் எனத் தெரியவந்தால், பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நீதியமைச்சின் சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு பெரிய எரிவாயு விநியோக நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் எரிவாயு கலவையில் சிக்கல் இருப்பதாக இறுதி விசாரணையில் தெரியவந்தால், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க முடியும்.
இழப்பீடு பெற மாவட்ட நீதிமன்றத்தில் இழப்பீடு வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர்களுடன் தொடர்புடைய வெடிப்புகள் மற்றும் தீ காரணமாக ஏற்படும் சூழ்நிலை காரணமாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கான உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்துவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நேற்று (03) அறிவித்துள்ளது.
வாயுக்களின் வாசனையினை வெளியிடும் எத்தில் மெர்காப்டான் இரசாயனத்தின் அலகு அளவு தரநிலைக்கு இணங்காததே இதற்குக் காரணம்.
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், இன்று (04) காலை சில பிரதேசங்களில் விநியோகஸ்தர்களுக்கு லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெற்றது.
இந்த பின்னணியில், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாளை முதல் உள்நாட்டு எரிவாயுவை சந்தைக்கு வெளியிட தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.