யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்தம் இன்று அமைச்சரவைக்கு!
சமீபகாலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக அமெரிக்காவின் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த உடன்படிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் பல அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அமைச்சரவை தீர்மானத்தை சவால் செய்ய அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் முன்வந்துள்ளனர்.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு தாக்கத்தை ஏற்படுத்திய காரணிகள் மற்றும் உடன்படிக்கையை எட்டுவதற்கான சட்ட கட்டமைப்பு என்பனவற்றை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.