போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபுத்தின் சஹெப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று அலரி மாளிகையில் சந்தித்தார்.
உலகம் முழுவதும்; வாழும் சுமார் மில்லியன் கணக்கான போரா சமூகத்தினருக்கு கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபுத்தின் சஹெப் தலைமை வகிக்கிறார்.
தான் நேசிக்கும் ஒரு நாடு என்ற ரீதியில் இலங்கைக்கு மீண்டும் விஜயம் செய்யக் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபுத்தின் சஹெப் பிரதமரிடம் குறிப்பிட்டார்.
முழு உலகமும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளமையை பாராட்டுவதாகவும் கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபுத்தின் சஹெப் தெரிவித்தார்.
வர்த்தக செயற்பாடுகளின் ஊடாக இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு போரா சமூகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் பணியை இதன்போது பிரதமர் பாராட்டினார்.
குறித்த சந்தர்ப்பத்தில் போரா ஆன்மீகத் தலைவர் உள்ளிட்டோரும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் கலந்து கொண்டிருந்தார்.