சவுதியின் உதவி தொடரும்: பிரதமரிடம் உறுதியளித்த சவுதி நிதியம்
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல் மர்ஷாட் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் மற்றும் அபிவிருத்திக்கான சவுதி நிதியம் வழங்கிவரும் நெருக்கமான ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருநாட்டு அரசாங்கங்களுக்கும் இடையே தொடர்ச்சியாக காணப்படும் ஒத்துழைப்பிற்கும், நட்பிற்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் ஆதரவுடன் இலங்கையில் அபிவிருத்தி செயற்பாடுகள் 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
அன்று முதல் கடந்த நான்கு தசாப்த காலங்களாக இந்நாட்டின் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்நிதியம் பங்களிப்பு செய்துள்ளது. கிராமிய பிரதேசங்களின் சிறு நீர்ப்பாசனம், கிராமிய நீர் வழங்கல் மற்றும் எதிர்கால வீதி அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷ சவுதி நிதியத்தின் பிரதிநிதிகளிடம் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.