3 வயது குழந்தையை மதுகுடிக்க வைத்த கொடூரம்; தந்தை, பாட்டி உள்பட 5 பேர் மீது வழக்கு

Keerthi
2 years ago
3 வயது குழந்தையை மதுகுடிக்க வைத்த கொடூரம்; தந்தை, பாட்டி உள்பட 5 பேர் மீது வழக்கு

கர்நாடகாவின் பெங்களூரு பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்தில் 26 வயது பெண் ஒருவர் தனது கணவர், மாமியார் உள்பட 5 பேர் மீது பரபரப்பு புகார் அளித்தார். அந்த புகாரில், எனது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். எனக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான்.

எனது கணவருக்கும், எனது சகோதரரின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வருகிறது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வருகிறார்கள். இதுபற்றி எனக்கு தெரியவந்ததும், எனது கணவருடன் நான் சண்டை போட்டேன். அப்போது எனது மாமியார், எனது கணவருக்கு ஆதரவாக பேசினார்.

மேலும் எனது சகோதரனால் குழந்தை பெற்று கொள்ள முடியாது என்றும், இதனால் சகோதரனின் மனைவி குழந்தை பெற்று கொள்ள எனது மகன் உதவி செய்கிறான் என்றும் மாமியார் கூறினார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் எனது கணவர், மாமியார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வரதட்சணை வாங்கி வரும்படி எனக்கு தொல்லை கொடுத்தனர்.

மேலும் எனது கணவர் கண்முன்னே எனக்கு பாலியல் தொல்லையும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் எனது 3 வயது மகனுக்கு எனது கணவர், மாமியார் ஆகியோர் சேர்ந்து பாலுக்கு பதிலாக பால் பாட்டிலில் மதுபானத்தை ஊற்றி வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கின்றனர்.

இதனை தடுத்த என்னையும் அடித்து, உதைக்கின்றனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த புகாரின்பேரில் பெண்ணின் கணவர், மாமியார் உள்பட 5 பேர் மீது பசவேஸ்வரா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவர்களை பிடித்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.