இலங்கையில் மீண்டுமொரு கொரோனா அலை உருவாகுமா? சுகாதார தரப்பு கூறுவது என்ன?
இலங்கையில் மீண்டுமொரு கொரோனா அலை ஏற்படும் வகையில் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுவதன் மூலம் கொரோனா அலை ஏற்படுவதனை தவிர்க்க முடியும்.
தனிமைப்படுத்தல் காலத்தினை ஏழு நாட்களாக குறைப்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவலில் அதிகரிப்பு ஏற்படாது.
இந்த தீர்மானமானது சுகாதார தரப்பின் நன்மை கருதி மேற்கொள்ளப்பட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான தொற்று நிலைமைகளின் போது தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடுதல் மற்றும் குறைவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
தற்போதைய நிலைமைகளுக்கமைய 32 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்ட போதும், மற்றுமொரு கொரோனா அலை ஏற்படும் வகையில் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவு செய்யப்படவில்லை.
இருப்பினும், கடந்த காலங்களைவிட தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.
இதன்படி, எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
ஆகவே, சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் மற்றுமொரு கொரோனா அலை ஏற்படுவதனை தவிர்க்க முடியும்.