ஆறாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -36.

#history #Article #Tamil People
ஆறாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -36.

ஆறாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்


திருமந்திரம் - ஆறாம் நூற்றாண்டு

  • திருமந்திரம் தமிழ் ஆகம நூல். வேதம் பொது நூல் என்றும், ஆகமம் சிறப்பு நூல் என்றும் சைவர் கூறுவர்.
  • திருமந்திரத்தில் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தந்திரம் என்பது பெயர். இதில் 232 அதிகாரங்கள் உள்ளன.
  • இப்பொழுது இதில் 3100 செய்யுட்கள் உள்ளன. ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்பதனால் இதற்கு உரியவை 3000 செய்யுட்களே என்று அறியலாம். எஞ்சியவை பிற்சேர்க்கையாம்.
  • ஆசிரியர் இதற்கு இட்ட பெயர் திருமந்திர மாலை. தமிழ் மூவாயிரம் என்றும் இதனைக் கூறுவர்.
  • தமிழில் தோன்றிய ஒன்பது ஆகமங்களே ஒன்பது தந்திரங்களாக இயற்றப்பட்டன என்பது அறிஞர் கருத்து.
  • இதற்கு வடமொழியில் மூலநூல் இல்லையென்பர். முழுத்தமிழில் பாடினார் திருமூலர் என்ற நம்பியாண்டார் நம்பியின் வாக்கினை இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

திருமூலநாயனார்

  • சைவ சமய அடியாருள் காலத்தால் முந்தியவர்கள் திருமூல நாயனாரும், காரைக்கால் அம்மையாரும் ஆவர்.
  • திருமூலர் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர். சுந்தர மூர்த்தி நாயனார், ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ என்று தம் பேரன்பு தோன்றக் கூறினார்.
  • கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பிகள், தம் திருத்தொண்டர் திருவந்தாதியில்,

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்
மேய்ப்போன் குரம்பை புக்கு
முடி மன்னு கூனல் பிறையாளன்
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படியே
பரவி விட்டு என் உச்சி
அடிமன்ன வைத்த பிரான் மூலன்
ஆகின்ற அங்கணனே (36)

  •  மூலன் என்பவர், சாத்தனூரைச் சேர்ந்தவனும், ஆக்களை மேய்ப்பவனும் ஆன இடையன் ஒருவன் இறந்தபோது, அவன் உடம்பில் தன் உயிரைச் செலுத்தியவர்.
  • அவர் வேதத்தில் சொன்னவாறே சிவபெருமான் பெருமையினை முழுத்தமிழில் பாடினார் என்பது இச்செய்யுளால் அறியப்படும் செய்திச் சுருக்கமாகும்.
  • கி.பி. 12ஆம் நூற்றாண்டினரான தெய்வச் சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் திருமூலர் வரலாற்றை விரிவாகப் பாடுகின்றார். அவர் கூறும் வரலாற்றுச் சுருக்கம் வருமாறு:-
  • திருமூலர் திருக்கயிலையில் வாழ்ந்த சிவயோகியார். அவர் தமிழகத்தில் பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய மாமுனிவரைக் காண விரும்பினார்.
  • பல தலங்களை வணங்கினார். அவர் காவிரிக்கரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தார். ஆவடுதுறையில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானை வணங்கி, சில நாள் அங்கே தங்கியிருந்தார்.
  • அவ்விடம் விட்டு நீங்கும்பொழுது, காட்டில் பசுக்களின் கதறலைக் கேட்டார். அவற்றை மேய்த்த இடையன் இறந்தமையே ஆக்களின் துயருக்குக் காரணம் என உணர்ந்தார்.
  • தம் ஆற்றலால் தம் உயிரை ஆயனின் உடம்பில் புகச் செய்தார். ஆக்களை உரியவரிடம் சேர்த்தார்.
  • ஆயன் மனைவி, இவரைத் தன் கணவன் என்று கருதி நெருங்கியபொழுது, ‘எனக்கு உன்னோடு உறவு இல்லை’ என்று கூறி, சாத்தனூரின் பொதுவிடத்தில் சிவயோகத்தில் அமர்ந்தார்.
  • பின்னர்த் தம் உடம்பைத் தேடிச் சென்றார். இறைவன் அதனை வேண்டும் என்றே மறைத்தருளினார்.
  • பின்னர் அவர் ஆவடுதுறைக்குச் சென்றார். திருக்கோயிலுக்கு மேற்கில் இருந்த அரசமரத்தடியில் அமர்ந்தார்.
  • மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்தார். ஆண்டுக்கு ஒரு செய்யுளாக 3000 செய்யுட்களை இயற்றினார்.
  • அங்ஙனம் இயற்றப்பட்டதே திருமந்திரம் என்னும் ஆகம நூல் என்பார் பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார்.

காலம்

சுந்தரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டினர். அவர் திருமூலருக்கு வணக்கம் சொல்வதனால் திருமூலர் காலத்தால் முந்தியவர். அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடல்களில் திருமூலரின் செல்வாக்குக் காணப்படுவதால், அவர்களின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவர் திருமூலர் என்று தெரிகிறது. தில்லைத் திருக்கோயிலில் உள்ள சிற்றம்பலத்திற்குக் கி.பி. 500இல் ஆண்ட பல்லவ அரசன் சிம்மவர்மன் பொன் வேய்ந்தான்.

அதன்பின் அது பொன்னம்பலம் ஆயிற்று. திருமூலர் இப்பெயரைக் கையாள்கின்றார். எனவே, திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்பர் அறிஞர்.

ஆச்சாரக் கோவை - ஆறாம் நூற்றாண்டு

  • ஆசாரம்’ என்னும் வடசொல் ஒழுக்கம் என்று பொருள்படுவது. நல்லொழுக்கக் கோட்பாடுகளைத் தொகுத்துக் கோவையாகத் தருவதனால் இப்பெயர் பெற்றது.
  • சிறப்புப் பாயிரம் நீங்கலாக இதில் நூறு வெண்பாக்கள் உள்ளன. வெண்பா வகையில் குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை, பஃறொடை ஆகிய பல வகையும் இதில் உள்ளன.
  • இது வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. இதனை

ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான் ஆசாரம்
யாரும் அறிய அறனாய மற்று அவற்றை
ஆசாரக் கோவை எனத் தொகுத்தான்

என்ற சிறப்புப்பாயிரப் பகுதியால் அறியலாம்.

ஆசிரியர்

  • இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் என்னும் சான்றோர்.
  • பெருவாயில் என்ற ஊரினர் இவர் என்று தெரிகிறது. கயத்தூர் என்ற பெரிய ஊர் இதன் அருகில் இருந்தது போலும்! இவர் வடமொழி வல்ல கல்வியாளர் என்பது நூலால் விளங்கும்.

சிறப்புச் செய்திகள்

அகந்தூய்மையளிக்கும் உயர்ந்த அறங்களை வற்புறுத்துவதோடு, அன்றாட வாழ்க்கையில கடைப்பிடிக்க வேண்டிய நல்ல ஒழுகலாறுகளையும் இது வற்புறுத்தியுள்ளது.

காலையில் எழுதல், காலைக்கடன் கழித்தல், நீராடல், உணவு உட்கொள்ளல், உறங்குதல் ஆகிய நடைமுறைகளின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை இது போல் வேறு எந்த நூலும் சொல்லவில்லை.

இன்னிலை - ஆறாம் நூற்றாண்டு

ஏலாதி - ஆறாம் நூற்றாண்டு

  • ஏலம், இலவங்கம், நாக கேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஆறு பொருள்களையும் முறையே 1 : 2 : 3 : 4 : 5 : 6 என்ற விகிதத்தில் கலந்து செய்வது ஏலாதிச் சூரணமாகும்.
  • இம்மருந்து போல, ஒவ்வொரு செய்யுளாலும் ஆறு அரிய அறக்கருத்துக்களைக் கொண்ட 80 வெண்பாக்களால் ஆன நூலும் ஏலாதி எனப் பெயர் பெற்றது.
  • உடல்நோய் தீர்க்கும் ஏலாதிச் சூரணம் போல, இச் செய்யுட்களில் வற்புறுத்தப்படும் அறங்களும் அகநோய் நீக்கி நலம் செய்யும் என்பது கருத்து.

நூலாசிரியர்

  • இதன் ஆசிரியர் கணிமேதையார். கணிமேதாவியார் என்றும் கூறுவர். இவர் சோதிட நூல் வல்லவர் என்பது இவர் பெயரால் அறியப்படுகின்றது.
  • திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே. இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கராவார்.
  • அருகனுக்கு வணக்கம் சொல்லி நூலைத் தொடங்குவதால் இவர் சமணர் எனக் கருதலாம்.

சிறப்புச் செய்திகள்

இந்நூலின் (2, 19, 42, 46) பாடல்கள் சமணர் சிறப்பாகப் போற்றும் கொல்லாமை, புலால்மறுத்தல், கள்ளுண்ணாமை என்னும் ஒழுக்கங்களை வற்புறுத்துகின்றன.

வீடுஇழந்தவர், கண்ணில்லார், தம் செல்வத்தை இழந்தவர், நெல் இழந்தவர், கால்நடைச் செல்வம் இழந்தவர் ஆகியோர்க்கு உணவு கொடுத்தவர் பல்யானைகளைக் கொண்டு உலகாளும் மன்னராய் வாழ்வர் (52) என்றும், கடன்பட்டவர், பாதுகாப்பு இல்லாதவர், கையில் பொருள் இல்லார், கால் முடம்பட்டவர், வயது முதிர்ந்தவர், வயதில் இளையார் ஆகியோருக்கு உணவு ஈந்தவரும் மண்மேல் படை கொண்டு ஆளும் பேறு அடைவர் (53) என்றும் இவர் கூறுவது சிறப்பாக உள்ளது. கல்வியின் சிறப்பை வற்புறுத்தும்

இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்
நடை வனப்பும், நாணின் வனப்பும் - புடை சால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல ; எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு (74)

என்ற செய்யுள் நினைந்து இன்புறுத்தக்கது.

தொடரும்....