இலங்கை ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை! - விரைவில் முக்கிய பதவியில் மாற்றம்
இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வெகு விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிகளை வழங்குவதற்கான முதல் நிபந்தனையாக சர்வதேச நாணய நிதியம், மத்திய வங்கி ஆளுனரை பதிலீடு செய்யுமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தம்மை பதவி விலக்குவது அரசியல் அமைப்பிற்கு புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கப்ரால் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், அமைதியான முறையில் பதவியை ராஜினாமா செய்யுமாறு அஜித் நிவாட் கப்ராலுக்கு பிரதமரும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுனர் பதவி தற்பொழுது நிதி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வரும் எஸ்.ஆர். ஆட்டிகலவிற்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.