மண்ணெண்ணைக்கு வரிசையில் நின்றவர் எப்படி இறந்தார்? பொலிஸ் அறிக்கை வெளியாகியது

Prathees
2 years ago
மண்ணெண்ணைக்கு வரிசையில் நின்றவர் எப்படி இறந்தார்? பொலிஸ் அறிக்கை வெளியாகியது

மீரிகம எரிபொருள் நிலையத்தில் இன்று காலை வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.  

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்று திரும்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் வந்த குறித்த நபர், மூன்று கேன்களுக்கு எரிபொருளை பெற்றதுடன்,  அதில் இரண்டு கேன்களை முச்சக்கரவண்டியில் வைத்துவிட்டு மூன்றாவது கேனை எடுப்பதற்காக சென்றுள்ளார்.

இவ்வாறு மூன்றாவது கேனை எடுத்துச் செல்லும்போது அவர் கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அங்குப் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அவரை மீட்டு மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் மீரிகம பகுதியைச் சேர்ந்த 76 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.