இலங்கையில் சர்வகட்சி மாநாடு – ஜனாதிபதிக்கு அடுத்தடுத்து விழும் அடி

Mayoorikka
2 years ago
இலங்கையில் சர்வகட்சி மாநாடு – ஜனாதிபதிக்கு அடுத்தடுத்து விழும் அடி

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பிலும், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 23ஆம் திகதி சர்வகட்சி மாநாடு ஒன்றை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

எனினும் இந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளாதிருக்க பல கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

குறிப்பாக அரசாங்கத்தின் 11 பங்காளி கட்சிகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.

மேலும், சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரனும் இதை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதில் கலந்து கொள்ளாமலிருப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துள்ளதாக அதன் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துக் கொள்ளாதிருக்க தீர்மானத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.