பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தையை ரூ.5 ஆயிரத்திற்கு விற்ற தாய்

#India #Tamil Nadu
பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தையை ரூ.5 ஆயிரத்திற்கு விற்ற தாய்

திருவள்ளூரில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்ற தாய். குழந்தையை மீட்ட காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சத்தரை பகுதியைச் சேர்ந்தவர்கள் நம்பிராஜன் சந்திரா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை என இரு குழந்தைகள் உள்ள நிலையில், சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், கூலிவேலை செய்யும் கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் சந்திரா ஸ்ரீ பெருமந்தூர் பேரூராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் துப்புரவு பணி செய்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையை சந்திரா, தனது வீட்டுக்கு தெரியாமல் அவருடன் பணியாற்றும் ஜெயந்தி என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக மப்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதைத் தொடர்ந்து மப்பேடு போலீசார், ஜெயந்தியிடம் இருந்து குழந்தையை மீட்டு தாய் சந்திராவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.