இலங்கை உயர்ஸ்தானிகர்- இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே சந்திப்பு
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று(27) சந்தித்த, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வேலைத்திட்டம் இறுதி செய்யப்படும் வரையில், இலங்கை எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு, உயர்ஸ்தானிகர் இந்திய நிதி அமைச்சரிடம் கோரியுள்ளார்.
அத்தியாவசிய வர்த்தகப் பொருட்கள் மற்றும் எரிபொருள் உட்பட கொடுப்பனவு துறையில் உள்ள பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு, இந்தியாவினால் நடைமுறைப்படுத்தப்படும் கடன் திட்டத்தை அதிகரித்தல் மற்றும் மறுசீரமைத்தல் என்பன தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை உயர்ஸ்தானிகரும், இந்திய நிதி அமைச்சரும் இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பின் சமகால நிலைமையை மீளாய்வு செய்துள்ளனர்.
அத்துடன், அதனை எதிர்காலத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.