மத்திய வங்கி ஆளுநருக்கு அரசாங்கம் முழு ஆதரவு
மத்திய வங்கியின் கடமையை சுதந்திரமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நாணயச் சபை உறுப்பினர் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோருடன் இன்று கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறுகிய காலத்திற்குள் நிலவிய நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும் தணிக்கவும் மத்திய வங்கியின் ஆளுநரின் முயற்சிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராட்டினார்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடி பொருளாதார நிபுணர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டம் வெற்றிகரமான முன்னேற்றம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விளக்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய சபை மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரின் வெற்றிக்கு தேவையான போது அரச தலைவர் மட்டத்தில் தலையிடத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.